Friday, September 23, 2011

ஒரே கொடியில் பூத்த இரு மலர்கள்


வெளிப்பார்வைக்குப் பார்த்தால் பிஜிபி.யும் காங்கிரசும் வேறு வேறாகத்தான் தோன்றும். ஆனால் இந்த இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பது கொஞ்சம் ஊன்றிப்பார்த்தால்தான் புரியும்.
அன்றைய காந்தி கொலையில் இருந்து இன்றைய அணுவிபத்து நஷ்ட ஈட்டுக் கொள்கை(?) வரைக்கும் இரண்டுமே ஒன்றுதான்.
(இந்த இரண்டின் லட்சணங்களையும் புட்டுப் புட்டு வைக்கும் புத்தகம் ஒன்றினை சமீபத்தில்தான் வாசித்தேன். எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை எழுதி ”அடையாளம்” பதிப்பகம் வெளியிட்டுள்ள “இந்து இந்தியா” என்கிற நூல்தான் அது. காங்கிரஸ் பற்றியும் பிஜெபி பற்றியும் ஏகப்பட்ட வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுகிறது அந்தப் புத்தகம். வாசிக்க விருப்பமுள்ளவர்கள் யோசிக்காமல் டயல் செய்ய வேண்டிய எண்: 04332 273444.)
கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்……….
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கொல்லப்படுவதற்கு ஓரிரு மாதங்கள் முன்பே…….
“காந்தியைக் கொலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப் படுகின்றன……
பிர்லா மாளிகையில் காந்தி மீது குண்டு வீசப்படுகின்றது……..
நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த கொடூர நிகழ்ச்சி குறித்த புலன்விசாரணையை மேற்கொண்ட போலீசார் முழு விவரங்களையும் கண்டறிவதில்லை……
குண்டுவீச்சுக்குப் பிறகு காந்தியின் உயிரைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகளோ……. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை……
மதவெறி பிடித்து மோதிக்கொள்ளும் தரப்புகள் ரத்ததாகத்தை நிறுத்த வேண்டும் என காந்தி உடனடியாக உண்ணாவிரதத்தில் குதிக்கிறார் (இரண்டரை மணி நேரமல்ல)………
ஆனால் காந்தியின் உண்ணாநிலை தனக்கு எதிரானது என வல்லபாய்பட்டேல் முடிவுகட்டிக் கொண்டு போக வேண்டாம் எனப்பலர் தடுத்தும் காந்தியைக் கைவிட்டு விட்டு டெல்லியில் இருந்து பம்பாய்க்கு பொட்டி தூக்குகிறார்…….
எந்த நேரமும் கொல்லப்படலாம் என ஆபத்தில் இருக்கும் காந்தியை அம்போ என விட்டுவிட்டு பட்டேல் பம்பாய் சென்றது உள்ளூர் போலீஸ்காரர்கள் மீது மிக மோசமான அவப்பேரை உருவாக்குகிறது.
ஏனெனில் பாதுகாப்புக்கான ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டியதே பட்டேல்தான். உள்ளூர் அதிகாரிகள் சர்தார் பட்டேலிடம் இருந்து காந்தியைப் பாதுகாப்பதற்கான உத்தரவுகள் வரும் வரும் வரும் வரும் வரும் எனக் காத்திருக்கிறார்கள்.
ஆனால் வெறும் காத்துதான் வருகிறது பம்பாய்க்குப் போன பட்டேலிடம் இருந்து.
காந்திஜியின் பாதுகாப்புக்காக சிறப்பு ஆணைகள் எதையும் பட்டேல் வழங்காததைக் கண்ட அதிகாரிகள் “இந்தக் கிழவனுக்கெல்லாம் எதற்குப் பாதுகாப்பு?” என மூலையில் ஒதுங்கி குறட்டை விட ஆரம்பிக்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு பொன்னான வாய்ப்புக்காகக் காத்திருந்த நாது ராம்கோட்சே நிர்க்கதியாய் தனித்து விடப்பட்ட அந்தக் கிழவரை சுட்டுக் கொல்வதன் மூலம் தன் தாகத்தைத் தணித்துக் கொள்கிறான்.
இந்த நாது ராம் கோட்சேவுக்கும் இந்து மகாசபைக்கும் இருந்த  நெருங்கிய தொடர்பு உலகறிந்த ரகசியம்.
காந்தியின் படுகொலைக்கு சர்தார் பட்டேலும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணனும், பி.ஜி.கோஷும் பகிரங்கமாகவே அறிவிக்கின்றனர். இந்திய பாகிஸ்தான் பிரிவினையை இறுதிவரை எதிர்த்த அபுல்கலாம் ஆசாத்தும் அறிவிக்கிறார்.
“இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா” என அன்றைக்கே கவுண்டமணி பாணியில் சொன்ன சர்தார்பட்டேல் அதற்கு சொன்ன காரணம் என்ன தெரியுமா?
“இத்தகைய குற்றச்சாட்டுகள் எல்லாம் மகாகனம் பொருந்திய காங்கிரஸ் பேரியக்கத்தை பலவீனப்படுத்துவதற்காக எதிரிகளால் சொல்லப்படுபவை. காந்திஜி மீது எனக்கு இருக்கும் விசுவாசம் உறுதியானது. அவரது மறைவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கட்சி ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.” என்று காங்கிரஸ் ”காரிய” கமிட்டிக் கூட்டத்தில் முழங்கினார் பட்டேல்.
இன்றைக்கும் எதிர்க்கட்சி ஆட்சிகளின் ”கதை” முடிக்கவோ அல்லது “கதை” முடிந்ததுமோ “காரியம்” செய்வதற்காக காரியக் கமிட்டியைக் கூட்டுவதுதானே அப்பேரியக்கத்தின் தொட்டில் பழக்கம்? இன்றைக்குப் போலவே அன்றைக்கும்  நடந்ததில் அதுவும் ஒன்று.
காங்கிரசை அறிந்தவர்கள் பட்டேலின் நதிமூலத்தை அறிவார்கள்.
பிஜெபி.யை அறிந்தவர்கள் இந்து மகாசபையின் நதிமூலத்தை அறிவார்கள்.
இன்னமும் புரியலேன்னா……
இன்றைய பிஜெபி.தான் நேற்றைய காங்கிரஸ்.
அல்லது நேற்றைய காங்கிரஸ்தான்
இன்றைய பிஜெபி.
மொத்தத்தில்…….
நடிகர் அர்ஜுனின் சினிமாக்களில் வருவது போல குத்திட்டு நிற்கும் “தேசபக்தி”……
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராக தொடைதட்டிக் கொண்டு விடும் சவால்கள்…….
வெண்டைக்காய் மொழிக் கொள்கை…….
மாநிலத்துக்கு மாநிலம் மரம் தாவும் மகத்தான ”தேசியக்” கொள்கை…..
அது தடாவைக் கொண்டு வந்தால்……
இது பொடாவைக் கொண்டுவரும் சனநாயகச் சாக்கடைக் கொள்கை…….
என எல்லாவற்றிலும் இரண்டுமே ஒரே கொடியில் பூத்த இரு மலர்கள்தான்.

No comments:

Post a Comment