Friday, May 08, 2009

அப்பாலே போ சாத்தானே

அவசர அவசரமாக ரேஷன் கடையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவனைப் பிடித்து நிறுத்தி கையில் ஒரு நோட்டீசைத் திணித்தார் ஒரு ஆசாமி.
இருந்த அவசரத்தில் படிக்காமலேயே….என்ன? என்றேன்.

“கர்த்தராகிய இயேசு மீண்டும் வருகிறார் சகோதரா” என்றார்.

நான் ரேஷன் வாங்கிய பிறகா…இல்லை அதற்கு முன்னமேவா? என்றேன்.
“அதற்கு முன்னால் நீங்கள் தேவ ஊழியர்களின் கைகளால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்.” என்றார்.

நான் ஸ்நானமே வாரத்துக்கு ஒரு தடவைதான்….அதென்ன ஞானம்? என்றேன்.

“அதற்குப் பிறகு நீங்கள் ஜீவியம்….தெய்வீக சுகத்துக்குக் கீழ்படிந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் மறுபடியும்.

சாதாரண சுகத்துக்கே கீழ்படிபவன்….தெய்வீக சுகம்ன்னா சும்மாவா இருக்கப் போறேன்? சீக்கரம் மேட்டருக்கு வாங்க என்றேன்.

அப்படியே இயேசு வந்தாலும் ஏழு வருட காலம் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பாராம்…அப்போது இன்னொரு டூப்ளிகேட் இயேசு மீசைக்கு மேலே ஒரு மச்ச அடையாளத்தோடு பயங்கர ஆட்சி நடத்துவாராம். ஏழு முடிந்த பிறகு இயேசுவின் ஏழரை அடச்சே….ஆயிரம் வருட ஆட்சி நடக்குமாம்….

அப்புறம் ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெற்ற என்னைப் போன்ற “பரிசுத்தவான்கள்” த்ரிஷா, பாவ்னா போன்ற தேவதைகளோடு சூப்பரான வாசஸ்தலங்களுக்கும்….

உங்களைப் போன்ற ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெறாதவர்கள் சுப்ரமண்யசாமி போன்றவர்களோடு அக்கினிக் கடலுக்கும் போவீர்களாம்….
உளறிக்கொண்டே போனது அது……

அது சரி நீங்க எந்த டாக்டர் கிட்ட டிரீட்மெண்ட் எடுத்துக்கறீங்க? என்றேன் சன்னமாக.

“அப்பாலே போ சாத்தானே” என்றபடி கையில் எதையோ அடிக்க எடுக்க..

உடு ஜூட் என்றபடி பின்னங்கால் பிடறியில் பட ரேஷன் கடை நோக்கிப் பறந்தேன்.