Wednesday, October 14, 2009

யோசிக்கட்டும் ஊடகங்கள்.

நடிகை புவனேஸ்வரி விபச்சாரத் தடுப்புப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதுதான் தமிழகத்தின் லேட்டஸ்ட் சமாச்சாரம். பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும்….. ஆக்கக் கூடாது என்கிற வாதங்களைத் தாண்டி நமக்கு வருகின்ற கோபமெல்லாம் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மீதுதான். ஆடம்பரங்களுக்காக இப்படிப் போனவர்கள் ஒருபுறம் இருந்தாலும் பிழைக்க வேறு வழியே கிடைக்காமல் வயிற்றுப் பிழைப்புக்காக இதைத் தேர்ந்தெடுத்து உயிர்வாழும் பெண்களைப் படம் பிடித்து “பிடிபட்ட விபச்சார அழகி இவள்தான்” என வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் நமது கோபம். அப்படிப் படம் போடும் பத்திரிக்கைகள் அவர்களோடு உறவு கொண்ட பெரிய மனிதர்களைப் படம்பிடித்துப் போட்டிருக்கிறதா? என்பதுதான் நமது கேள்வியே. பல ஆண்களோடு உறவு கொள்ளும் பெண்ணுக்குப் பெயர் விபச்சாரி என்றால்…. பல பெண்களோடு உறவு கொள்ளும் ஆணுக்கு என்ன பெயர்?

”பிடிபட்ட அப்பெண்ணுக்கும் ஒரு குடும்பம் இருக்கும்…அவருக்கு பள்ளிக்குச் செல்லும் மகனோ அல்லது மகளோ இருக்கக்கூடும்….. புகைப்படம் போட்டால் அவரது குடும்பமே துயரத்துக்கு உள்ளாகும்” என்கிற குறைந்தபட்ச மனிதநேயம் கூட இந்த நான்காவது தூணுக்கு இல்லாமல் போனது வெட்ககரமான விஷயம்.
நடிகர் ஜெமினி கணேசன் பலதார மணம் செய்தால் அவருக்குப் பெயர் காதல் மன்னன். அதே வேலையை ஜெயலட்சுமி செய்தால் வேறு பெயரா?
ஜெமினி செய்தால் தொலைக்காட்சியில் “ஸ்டாருடன் ஒரு நாள்” என ஒளிபரப்பாகும்……
அதையே ஜெயலட்சுமி செய்தால் “குற்றம் நடந்தது என்ன?” என்று ஒளிபரப்பாகும்……..
என்ன நீதி இது?